இலங்கைக்கு தேசிய வருமானத்தை அதிகமாக தேடித்தரும் கைத்தொழில்களில் சுற்றுலாத்துறையும் ஒன்றாகும். எனினும் பல்வேறுபட்ட காரணங்களுக்காக சில தசாப்தங்களாக இத்துறை பின்தங்கிய நிலையிலேயே காணப்பட்டது. ஆனால் அண்மைக் காலமாக இலங்கையில் யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து சுற்றுலாத்துறை வெகுவாக வளர்ச்சியடையத் தொடங்கியுள்ளது.
இலங்கையில் கடந்த காலங்களில் குறிப்பாக 2007 மற்றும் 2008 காலங்களில் கூட சுற்றுலாத் துறையின் வளர்ச்சி குறைவாகக் காணப்பட்டது. 2006 இல் பதிவுசெய்யப்பட்ட 559,603 பயணிகளை விட 2007 இல் 494,008 பயணிகளாக அதாவது 11.7 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. 2008 இல் இதைவிட வீழ்ச்சி அதாவது 438,475 ஆக 11.2 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தது.
குறிப்பாக இக்காலப்பகுதிகளில் வட அமெரிக்கா, அவுஸ்திரேலியா, தென்னாசியா, கிழக்காசியா, கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஐரோப்பா போன்ற இலங்கைக்கு அதிகமாக சுற்றுலாப் பயணிகள் வரும் நாடுகளில் விடுக்கப்பட்ட பயண ஆலோசனைகள் மற்றும் நாட்டில் காணப்பட்ட யுத்தத்தின் காரணமாக ஏற்பட்ட பாதுகாப்பற்ற நிலைமைகள் போன்றவற்றால் பயணிகளின் வருகை குறைவாக காணப்பட்டது எனலாம்.
எனினும் மத்திய கிழக்கு, மாலைதீவு, ரஸ்யா போன்ற நாடுகளில் இருந்து ஓரளவு அதிகரித்த வருகை காணப்பட்டது.
எனவே சுற்றுலாத் துறையால் இலங்கைக்கு கிடைத்த வருவாய் பற்றி பார்க்கையில், 2006 இல் சுற்றுலா வருவாயானது 410 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலரிலிருந்து 2007ல் 385 மில்லியனுக்கும், இது 2008ல் 342 மில்லியனுக்கும் வீழ்ச்சியடைந்தது என்றே கூற வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்தும் சுற்றுலாத் துறை வீழ்ச்சியடைவதை தடுக்கும் முகமாக இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதாவது, 2006 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் விதிக்கப்பட்ட ஐ. அ. டொலர் 10 கொண்ட விசா கட்டணத்தை பிற்போட ஒப்புதலளித்தது, சுற்றுலா தொழிற்பாடுகளின் மீது கொடுபடத்தக்க பெறுமதிசேர் வரியினை தற்காலிகமாக பிற்போட்டமை, தாமதமான பெறுமதிசேர் கொடுப்பனவுகளின் மீதான தண்டப்பணத்தினை இடைநிறுத்தியமை மற்றும் மூலதன கொடுப்பனவுகளின் மீதான சட்ட இசைவுத் தாமதம் போன்ற வழிகளில் நிவாரண வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.
2007 இல் மிக முக்கிய செயற்பாடு யாதெனில் 2005 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க சுற்றுலா வெளிப்படுத்தல் சட்டம் 2007 ஒக்டோபர் 1 ஆம் நாளிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டமையாகும்.
இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டமையுடன் இலங்கை அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம், இலங்கை மாநாட்டு பணியகம், இலங்கை சுற்றுலா மற்றும் சுற்றுலா அபிவிருத்தி முகாமைத்துவ நிறுவனம் என்பன தொழிற்பட தொடங்கியமையானது தனியார் துறையின் பங்களிப்பை உத்வேகப்படுத்தியது.
புதிய சுற்றுலா சட்ட முகாமைத்துவத்தில் அரச, தனியார் பங்குடமையினையும் சுற்றுலா கைத்தொழிலினை கட்டுப்படுத்துவதிலும் கூடியளவிற்கு காத்திரமான தன்மையினை உருவாக்கியது.
இத்துறையில் தனியார் துறையினர் முக்கிய தொழிற்பாட்டாளர்களாக இருப்பதனால், வெளிநாட்டு சந்தைகளையும் அதேபோன்று உள்நாட்டு முயற்சிகளையும் இலக்காகக் கொண்ட சுற்றுலாக்கொள்கையின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கான இத்துறையின் பங்களிப்பு அரசாங்கத்தினால் வழங்கப்படும் வசதிகளின் மூலம் அதிகரித்தது.
இதன் அடுத்த கட்டமாக 2008ல் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை சுற்றுலாவினை மேம்படுத்துவதற்கு பல வழிகளை மேற்கொண்டது.
அதாவது, வளர்ச்சியடைவதற்குரிய உள்ளார்ந்த வளத்தைக் காட்டிய நான்கு முக்கிய சந்தைகளான இந்தியா, ஐக்கிய இராட்சியம், ரசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் மீது முக்கிய கவனம் செலுத்தி 2008 தொடக்கம் 2010 வரை சந்தைப்படுத்தல் உபாயம் மற்றும் செயற்பாட்டுத் திட்டம் மேற்கொள்ளப்பட்டமை, வீழ்ச்சியடைந்து செல்லும் சுற்றுலா கைத்தொழிலுக்கு புத்துயிரளிப்பதற்காக கடன்களை மீள் அட்டவணைப்படுத்தல், 15 சதவீத எரிபொருள் மேலதிக கட்டணம் என்பவற்றை உள்ளடக்கிய தூண்டல் பொதியொன்றை அரசாங்கம் முன்வைத்தது.
எனினும் இலங்கையின் சுற்றுலாத் துறையானது இக்காலப் பகுதியில் பாரிய வளர்ச்சி காணவில்லை. இந்த சுற்றுலாத் துறையின் பின்னடைவானது 2009 ஆம் ஆண்டு முதல் 5 மாதங்கள் வரை நீடித்தது எனலாம். அதாவது, இக் காலப் பகுதியில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 18.3 சதவீதம் கொண்ட சராசரி வீதத்தில் வீழ்ச்சியடைந்திருந்த வருகைகள் மே மாதத்தில் அதிகரித்தது.
அதாவது, அடுத்து வந்த 7 மாத காலப் பகுதியிலும் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 20.4 சதவீதம் கொண்ட சராசரி வீதத்தில் வளர்ச்சியடைந்தது. குறிப்பாக 2009 மே மாதத்திற்கு பின் உள்நாட்டு மோதல்கள் முடிவடைந்தமையானது, இலங்கையில் பயணம் மற்றும் சுற்றுலாத் துறைக்கு புதியதொரு யுகத்தினை திறந்திருந்தது.
புலிகளுடனான யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கான அச்சம் நீங்கியது. எனவே சூழ்நிலைகள் மாற்றமடைந்தமையால் சில நாடுகளால் விடுக்கப்பட்ட மோசமான பயண ஆலோசனைகள் புறக்கீடு செய்யப்பட்டன அல்லது தளர்த்தப்பட்டன.
இதனால் 2009இல் சுற்றுலாப் பயணிகளின் வருகை பற்றி பார்க்கையில், பெரும் எண்ணிக்கையினர் இந்தியாவிலிருந்து வந்தனர் (83,634). அதனைத் தொடர்ந்து ஐக்கிய இராட்சியத்திலிருந்து வந்தனர் (81,594). அதேபோன்று மாலைதீவு (31,916), ஜேர்மனி (29,654) ஆகிய நாடுகளில் இருந்தும் வருகை தந்தனர்.
மத்திய கிழக்கு, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா என்பவற்றிலிருந்தும் குறிப்பிட்டளவு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. எனினும் 2009ல் உலகளாவிய பொருளாதார மந்தம் மற்றும் சில நாடுகளில் பரவிய பன்றிக் காய்ச்சல் போன்ற தொற்று நோய் என்பன மக்களின் பயணத்திற்கு இடையூறாக அமைந்தன. 2009இல் இலங்கையின் சுற்றுலா வருவாய்கள் ஐ. அ. டொலர் 350 மில்லியனுக்கு 2.2 சதவீதத்தினால் அதிகரித்தன.
இலங்கையை மொத்த பன்னாட்டு சுற்றுலா நாடுகளுடன் ஒப்பிடுகையில் இன்னும் போட்டித் தன்மையைக் கொண்ட நாடாகவே உள்ளது. மேலும் தங்குமிட விடுதிகளை பொறுத்தமட்டில் இலங்கை அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதாவது, தற்போது இலங்கையில் 14,800 தங்குமிட விடுதி அறைகளே உள்ளன.
இதனை 2016 ஆம் ஆண்டு 40 ஆயிரம் அறைகளாக அதிகரிக்க உள்ளதாக அரசு தெரிவிக்கிறது. இதற்காக இலங்கை சுற்றுலா சபையினூடாக 16 ஹோட்டல் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
418 அறைகள் கொண்டதாக இவை அமைக்கப்படும். அது தவிர பாசிக்குடா சுற்றுலா பிரதேசத்தில் 1000 அறைகள் கொண்ட 13 ஹோட்டல்களும், கல்லடியில் 350 அறைகள் கொண்ட இரு ஹோட்டல்களும், பெந்தோட்டையில் 250 அறைகள் கொண்ட ஹோட்டலொன்றும் அமைக்கப்பட /{மியி.
மேலும் மத்திய வங்கியின் அறிக்கையின் படி 2010இல் சுற்றுலா வருகைகளின் எண்ணிக்கை 26 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்து 577,000 வருகைகளாகி, 2004ல் பதிவு செய்யப்பட்ட 566,000 வருகைகளை விஞ்சும் என எதிர்பார்க்கப்படுவதனால், சுற்றுலா விடுதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும்.
சுற்றுலாக் கைத்தொழில் பாரிய வருமானத்தை உருவாக்கக்கூடிய உள்ளார்ந்த வளங்களை கொண்டிருப்பதனை கருத்திற்கொண்டு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மோதல்களினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் அதேபோன்று முதன்மை சுற்றுலா மையங்களாக தெரிவு செய்யப்பட்ட தீவின் மற்றைய பகுதிகளிலும் சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வதற்கு பல வழிமுறைகளை மேற்கொண்டுள்ளது.
அரசாங்கம் தீவின் மிகச் சிறந்த கரையோரம் என அறியப்பட்ட கிழக்கு மாகாணத்தின் முதன்மை பொழுதுபோக்கு மையங்களான அறுகம்குடா, பாசிக்குடா மற்றும் திருகோணமலை போன்ற இடங்களில் உள்ள கரையோர நகரங்களை மேம்படுத்துவதற்கு எண்ணியுள்ளது. கற்பிட்டி மற்றும் உள்நாட்டில் அடையாளம் காணப்பட்ட தெரிந்தெடுக்கப்பட்ட பகுதிகளை கவர்ச்சிகரமான சுற்றுலா அமைவிடங்களாக அபிவிருத்தி செய்வதற்கும் திட்டமிட்டுள்ளது.
மேலும் சுற்றுலாத் துறையை விருத்திசெய்ய வேண்டுமெனில் இலங்கையின் தென்பகுதியில் மாத்தறை ஹிக்கடுவை, மிரிச, அம்பாந்தோட்ட போன்ற இடங்கள் இயற்கை வனப்பு கொட்டிக்கிடக்குமிடங்கள் என்பதனால் இவற்றின் கரையோரத்தை பாதுகாப்பதோடு, இங்கு அமைந்துள்ள விடுதிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபையும் சுற்றுலாப் பயணிகளின் பல்வேறுபட்ட பிரிவினரையும் கவரும் விதத்தில் தொடர்ச்சியான விழாக்களையும் ஊக்குவித்து வருகின்றது. அதன் ஒரு கட்டமாக சூதாட்ட விடுதிகளை சட்டபூர்வமாக்க பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டுவரப்படவுள்ளது.
1978 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சூதாட்ட விடுதிகள் ஒழுங்கில்லாமல் உள்ளதாகவும், அவற்றை ஒழுங்கின் கீழ் கொண்டு வரவுள்ளதாகவும் அரசு தெரிவிக்கின்றது. முன்பு சூதாட்ட விடுதிகளை தடைசெய்த நாடுகள் கூட அவற்றை இன்று நடைமுறைப்படுத்தியுள்ளன என்று கூறி, உதாரணமாக சிங்கப்பூர் எடுத்துக்காட்டப்படுகிறது.
சூதாட்ட விடுதிகள் சுற்றுலாத் துறையை வளர்க்கக்கூடியதுதான் என்பதை ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம். எனினும் இவை பாடசாலைகள் உள்ளிட்ட பொது இடங்கள் மற்றும் கோவில்கள் முதலிய வணக்கஸ்தலங்கள் போன்ற பொது இடங்களில் அமைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் குறிப்பிட்ட வயதின் கீழ் உள்ள ஆண்கள், பெண்கள் செல்லமுடியாதவாறு தடைசெய்யப்படுவதோடு, சமூக சீர்கேடுகள் நடைபெறாவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
சுற்லாத் துறையை விருத்தி செய்ய தங்குமிட விடுதிகள் அழகிய சூழலில் அமைக்கப்பட்டாலும், அவை வாகன இரைச்சல், அசுத்தமான சூழல், சிறு வியாபாரிகளின் அத்துமீறல், திருடர்கள், போதைப்பொருள் பாவனை போன்ற பிரச்சினை இல்லாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.
மேலும் முக்கியமான சுற்றுலா மையங்களாக விளங்கும் புனிதஸ்தலங்கள் மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் சேதப்படுத்தப்படா வண்ணமும் அசுத்தப்படுத்தப்படா வண்ணமும் பாதுகாக்கப்பட வேண்டும்.
இலங்கையை உலகிலுள்ள பாதுகாப்பான மற்றும் முக்கியமான சுற்றுலாத்தலமாக டைம்ஸ் சஞ்சிகை தெரிவித்தமை இனிவரும் காலங்களில் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக அமையும் எனலாம்.
எனவே சுற்றுலாத்துறையை விருத்தி செய்வதன் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். அதாவது விடுதிகள், கடைகள், டக்ஸி மற்றும் முச்சக்கரவண்டி ஓட்டுனர், சிறுவியாபாரிகள், படகோட்டி, சுற்றுலாப் பயணிகளின் உதவியாளர்கள் என தொழில்வாய்ப்பு அதிகரிக்கும்.
உதாரணமாக ஹிக்கடுவையில் உள்ள 60 வீதமான மக்கள் சுற்றுலாத்துறை சார்ந்த தொழிலிலேதான் ஈடுபடுகிறார்கள். மேலும் கிழக்கு மாகாணத்தில் புதிதாக 10,000 பேர் சுற்றுலாத்துறைக்கு சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.
2014 ஆம் ஆண்டு இலங்கைக்கு 2 மில்லியன் சுற்றுலாப்பயணிகளை அழைத்துவர இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. எனவே சுற்றுலாத் துறையை விருத்தி செய்யும் நோக்கில் அடுத்த வருடம் விஷிட் ஸ்ரீலங்கா என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
அத்தோடு இலங்கையின் சுற்றுலாத்துறை பற்றி சர்வதேச மட்டத்தில் B. B. C. மற்றும் C. N. N. தொலைக்காட்சிகள் மூலம் பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவும் இலங்கையின் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு கைகொடுக்கும் எனலாம். மேலும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை இலங்கையில் நடத்த திட்டமிட்டுள்ளமை சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு பேருதவியாக அமையப் போகின்றது.
No comments:
Post a Comment